சுமையும் சுகமே… அவள் புன்னகையில்!

Spread the love

சுமையும் சுகமே… அவள் புன்னகையில்!

 

தாய்வீட்டுச் சுதந்திரம் இங்கே கனவு…இது கடமைகள் ஆளும் புகுந்த வீடு!

காலை ஒன்பது மணி என்பது சோம்பல் அல்ல— இரவெல்லாம் விழித்திருந்த என் தாய்மைக்கு, இந்த உலகம் தரும் சிறு சலுகை!

விடியல் எனக்கில்லை, என் வேலைகளுக்கே… மொட்டை மாடி வெயிலின் ஈரம் காயும் முன்,

என் குளியல் ஈரம் காயும் முன்னே— சிணுங்கி அழும் என் சிறு தேவதை, என் நேரத்தை மொத்தமாய் குத்தகை எடுக்கிறாள்!

சமையல் மட்டுமே அத்தையின் பொறுப்பு… ஆனால் அடுக்களை மீட்டெடுப்பது என் தினசரி யுத்தம்! பாத்திரம் கழுவி, பசியாற்றி, அத்தையை அவர் பணிகளுக்கு வழியனுப்புவதற்குள்— என் பாதி நாள் கரைந்தே போகிறது!

துணி துவைக்கும் இயந்திரத்தோடு போட்டி… மாடிப்படிகளில் ஏறி இறங்கித் தேய்கிறது என் பாதங்கள்! ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடு துடைத்து, துணிகளை மடித்து, இரவு சமையல் முடித்து… பெற்றவள் குரல் கேட்கக் கூடப் பொழுதில்லை!

வேலைகள் அனைத்தும் ஓய்ந்த பின்னே, விண் அதிரும் உடல் வலியோடு— “இவள் தானே என் சோர்வுக்கும் காரணம்?” என்ற சிறு கோபத்தோடு என் கண்மணியைப் பார்க்கிறேன்…

ஆனால்… என்னை பார்த்த மாத்திரத்தில், அவள் உதிர்க்கும் அந்தத் தேவதை சிரிப்பில்— நொடியில் கரைகிறதே என் மொத்த வலியும்!

காய்ந்து போன என் மனவெளியில் திடீரென வீசுதே வசந்த காலத் தென்றல்! மலையாய் அழுத்திய சுமைகள் கூட, மலர் மாலையாய் மாறி சுகம் தருகிறதே!

வெறுமனே சுழலும் இந்த ஓய்வில்லா சுழற்சி” வாழ்க்கையை, அர்த்தமுள்ளதாய் மாற்றும் மந்திர சக்தி— என் செல்ல மகளின், அந்த ஒற்றைப் புன்னகைக்குத் தானே உண்டு!

                                                                                               -அன்பின் வித்தகன்

Did you find this post helpful?
 2 0
100%
0%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *