77-வது குடியரசு தினம்: கொண்டாட்டமா? கடமையா? – ஒரு சாமானியனின் கோரிக்கை
முன்னுரை: குடியரசு என்பது காகிதத்திலா, நடைமுறையிலா?
நாளை, ஜனவரி 26. இந்தியா 77-வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. 1950-இல் நமது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், “இந்த நாடு மக்களுக்கானது, மக்களால் நடத்தப்படும், மக்களுக்காக இயங்கும்” என்ற அடிப்படை வாக்குறுதி பறைசாற்றப்பட்டது. ஆனால், இன்று 2026-ல், ஒரு சாதாரண குடிமகன் தனது அன்றாட வாழ்வில் அந்த வாக்குறுதி எத்தனை சதவீதம் நிறைவேறியிருக்கிறது என்று கேட்கும் போது, பதில் ஒரு பெரும் மௌனமாகவே இருக்கிறது.
குடியரசு தினத்தின் உண்மையான நோக்கம் என்ன? வெறும் மிட்டாய் விநியோகமா? ஒருநாள் விடுமுறையா? கலை நிகழ்ச்சிகளா? இல்லை. ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக நாட்டில், “சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற கோட்பாடு ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உயிர்ப்போடு இயங்குவதை உறுதி செய்வதே அதன் நோக்கம். ஆனால், இன்று நாம் எதிர் நோக்கும் எதார்த்தம் வேறு விதமான கதை சொல்கிறது.
“குடியரசு தினம் என்பது நாம் மீட்டெடுத்த இறையாண்மையை வெறும் கொண்டாட்டமாகப் பார்ப்பதல்ல; அந்த இறையாண்மையும், சட்டமும் முதலில் அரசாலும், அரசு அதிகாரிகளாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் காக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம்! ஒரு சாதாரண குடிமகனைச் சட்டத்தைப் பின்பற்று என்று சொல்லும் அரசாங்கம், முதலில் அதே சட்டத்தைத் தான் பின்பற்றுகிறோமா என்று சுயபரிசோதனை செய்யும் நாளே உண்மையான குடியரசு தினம்!”
1. சட்டம்: கையில் இருப்பதா? கண்ணில் படுவதா? சாமானியனின் கேள்வி!
70 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் குடியரசைக் கொண்டாடுகிறோம். ஆனால், அரசாங்கம் ஒரு சாதாரண குடிமகனுக்கு, அவனுடைய உரிமைகள் என்ன, அவற்றை எப்படி நிலைநாட்டுவது என்று எந்த முழுமையான முயற்சியும் எடுத்ததா?
- ஏன் ஒரு சட்ட அறிவிப்புப் பலகை கூட இல்லை? ஒரு பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்தம், ரேஷன் கடை, பதிவு அலுவலகம் – எந்த பொது இடத்திற்குச் சென்றாலும், அந்த இடத்திற்கு ஏற்ற சட்ட விதிகள், நடைமுறைகள், உரிமைகள் எளிய மொழியில் எழுதப்பட்ட பலகை ஏன் இல்லை?
- தெரியாததால் ஏமாற்றும் சூழ்நிலையை ஏன் உருவாக்க வேண்டும்? ஒரு குடிமகன் தெரியாமலேயே விதிமீறல் செய்வதை விட, அவனுக்கு முதலில் விதி என்ன என்று சொல்லிக் கொடுப்பது அரசின் முதல் கடமை அல்லவா?
- “அவருக்குத் தெரியாது” என்பது ஏன் சாக்கு? ஒரு அதிகாரி தவறு செய்தால், “சட்டம் தெரியாது” என்று சொல்ல முடியாது. அதே நியாயத்தை அரசு மக்களுக்கும் பொருந்தும்படிச் செய்ய வேண்டும். ஆனால், மக்களுக்குச் சட்டம் தெளிவாகத் தெரிந்தால், அதிகாரத்தின் தன்னிச்சையும், ஊழலும் கட்டுப்படுத்தப்படும் என்ற பயம்தான் இந்தத் தயக்கத்திற்குக் காரணமா?
“மக்கள் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்” என்று கட்டாயப்படுத்தும் அதே அரசாங்கம், அந்தச் சட்டத்தை மக்களுக்கு எளிமையாக விளக்கி வைக்கும் கடமையை ஏன் தவிர்க்கிறது?
“காகிதத்தில் இருக்கும் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நடைமுறைக்கு உதவாத கல்வியைப் போதிப்பது எதற்கு?
2. ரோடு போடுவதில் ‘கோடி‘ – கோடு போடாமல் ‘ஓடி‘! எதார்த்தத்தின் கசப்பான நகைச்சுவை
பள்ளிப் புத்தகங்களில் நாம் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளைப் பற்றிப் படிக்கிறோம். ஆனால், நடைமுறையில் அந்த ‘மஞ்சள்‘ எச்சரிக்கை விளக்கே பல இடங்களில் இல்லை. இதைவிடக் கடுமையான விஷயம், சாலைகளின் நிலை.
- “நீ கோடு போட்டால் நான் ரோடு போடுவேன்” – இன்றைய மாற்றம்: இன்று அதிகாரிகளின் மனநிலை, “ரோடு போடுவதற்கான ‘கோடி‘யை (நிதியை) சுருட்டிவிட்டு, கடைசியில் சாலையில் ஒரு ‘கோடு‘ கூட போடாமல் ஓடிவிடுவது” ஆக மாறிவிட்டது. சாலைகளில் கோடுகள் கிடையாது. ஆனால், வாகன ஓட்டிகளை விதி மீறினார்கள் என்று தண்டிக்கிறோம். இது எந்த நியாயம்?
- விஐபி ரோடும், விளிம்பு நிலை ரோடும்: தலைமைச் செயலகத்தை ஒட்டிய ‘விஐபி ரோடுகள்‘ தரமாகவும், கோடுகளுடனும் இருக்கின்றன. அதே நகரின் பிற பகுதிகளில், மெட்ரோ வேலை பெயரால் சாலைகள் அலங்கோலமாகக் கிடக்கின்றன. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது, சாலைத் தரத்தில்கூட வேறுபாடு காட்டலாமா? இதுதான் நீங்கள் சொல்லும் குடியரசின் சமத்துவமா?
- கல்வி முறையின் தோல்வி: புத்தகத்தில் இருப்பதை நடைமுறைப்படுத்த முடியாத கல்வி முறை, அல்லது நடைமுறையில் இருப்பதைப் புத்தகத்தில் சொல்லத் தயங்கும் கல்வி முறை – இரண்டுமே ஒரு தோல்வியுற்ற கல்வி முறையின் அறிகுறியே. காகிதத்தில் இருப்பதைக் காற்றில் பறக்கவிட்டு, நடைமுறைக் கடமையில் நாம் தவறிவிட்டோம்.
“கற்றதைப் பின்பற்று; இல்லையேல் பின்பற்றுவதைக் கற்றுக்கொள்! இரண்டும் இல்லையேல், ஏதுமில்லை வாழ்வின் பொருள்!”
3. கோவிலில் தொடங்கி, அரசியல்வாதி அலுவலகம் வரை: எல்லோரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வாருங்கள்!
சட்டம் என்பது பலவீனரை மட்டும் கட்டுப்படுத்துவதற்கல்ல. அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும்தான். இந்த அடிப்படையில்:
- கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: நாம் அடிக்கடி செல்லும் கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) சட்டங்கள் என்ன சொல்கின்றன? கோவில் நிதி, சொத்து, நடைமுறைகள் குறித்த விதிகள் ஏன் மக்கள் கண்ணில் படும்படி பலகையாக வைக்கப்படவில்லை? இதை வைத்தால், கோவில் நிர்வாக ஊழலை மக்கள் நேரடியாகத் தட்டிக் கேட்க முடியும்.
- அரசியல்வாதிகளுக்கான ‘நடத்தைப் பலகை‘: ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் (MLA/MP) தொகுதி அலுவலகத்தின் நுழைவாயிலிலும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களின் சுருக்கம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- ஊழல் தடுப்புச் சட்டம், நடத்தை விதிகள்.
- தொகுதி நிதி (MLALADS/MPLADS) செலவழிப்பின் விதிமுறைகள்.
- மக்கள் புகார் அளிக்கும் நடைமுறை (எந்த அதிகாரிக்கு, எப்படி).
- தனிமனித அதிகாரம்: அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சட்டங்களை இயற்ற மாட்டார்கள். எனவே, ஒரு தனி குடிமகனுக்கு, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதியை எதிர்கொள்ள சட்டப்பூர்வமான அதிகாரம் (எ.கா., திரும்பப் பெறும் உரிமை – Right to Recall) வழங்கப்பட வேண்டும். மக்களுக்குச் சட்டம் தெரிந்தால், அதிகாரத்தின் கொள்ளையைத் தடுக்க முடியும் என்ற பயந்தான் இதைத் தடுக்கிறதா?
4. நுகர்வோர் உரிமை முதல் காவல் நிலையம் வரை: சட்டம் எல்லா இடங்களிலும் பரவட்டும்!
- உணவகம், நகைக்கடை, மளிகைக் கடை: “இங்கு தரக்குறைவு/ஏமாற்று நடந்தால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் இந்த அதிகாரியை அணுகலாம்” என்ற அறிவிப்பு பலகை கட்டாயமாக இருக்க வேண்டும்.
- காவல் நிலையம்: “குற்றவியல் நடைமுறைச் சட்டம் (BNSS) படி உங்கள் உரிமைகள் இவை. FIR நகலை இலவசமாகப் பெறலாம். விசாரணை இவ்வாறு நடக்கும்” என்ற விளக்கம் இருக்க வேண்டும்.
- அரசு மருத்துவமனைகள், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம்: ஒவ்வொரு துறைக்கும் உரிய சட்டங்கள், காலவரையறைகள், பொறுப்பான அதிகாரியின் பெயர் பொது இடத்தில் தொங்க வேண்டும்.
இதைச் செய்வது கடினமா? இல்லை. விருப்பமில்லாததுதான் காரணம். ஒரு ‘தேசிய முற்போக்கு சட்ட அறிவிப்புக் கொள்கை‘ (National Progressive Legal Display Policy) தேவை.
முடிவுரை: சிரிப்பதா? சிந்திப்பதா? போராடுவதா?
சட்டத்தை ஒவ்வொரு அடியிலும் மீறுபவர்கள் – கோடிகளைக் கொள்ளையடித்து, சாலையில் கோடு போடாமல் ஓடுபவர்கள், கோட்டையில் அமர்ந்து சமத்துவம் பேசுபவர்கள் – அவர்களே மேடையில் நின்று குடியரசு தினத்தைக் கொண்டாடும்போது, ஒரு சாதாரண மனிதனால் சிரிக்கத்தான் முடியும். அந்தச் சிரிப்பு, மகிழ்ச்சியில் வருவது அல்ல; “என்ன கொடுமை இது!” என்ற விரக்தியிலும் வேதனையிலும் வரும் கசப்பான சிரிப்பு.
இந்த 77-வது குடியரசு தினம், வெறும் கொண்டாட்ட நாளாக இருக்கக் கூடாது. அது, அரசாங்கம் தன் கடமையைச் செய்கிறதா என்று மக்கள் ‘கணக்குக் கேட்கும் நாளாக‘ இருக்க வேண்டும்.
நமது கோரிக்கை தெளிவானது:
-
#சட்டப்பலகைஎன்க்கடமை: அனைத்து பொது இடங்களிலும் சட்ட அறிவிப்புப் பலகைகள் கட்டாயம்.
-
#கோடிகளல்லகோடுகள்வேண்டும்: ஊழல் ‘கோடி‘யை அடிப்பதை நிறுத்தி, சாலையில் முதலில் ‘கோடுகளை‘ப் போடுங்கள்.
-
#அதிகாரம்மக்களிடம்: அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட அறிவு மக்கள் கைகளுக்குச் சென்றடைய வேண்டும்.
கோட்டையில் உட்கார்ந்து கோடியில் கொள்ளையடிப்பவர்களே… கொடி ஏற்றுவதற்கு முன், மக்கள் நடக்கும் பாதையில் ஒரு ‘கோட்டை‘ப் போடுங்கள். சட்டம் காகிதத்தில் இருந்து இறங்கி, தெருவில் நடமாடும் நாள்தான், இந்தியா உண்மையான குடியரசு நாடாகும்.
இனிய 77-வது குடியரசு தின வாழ்த்துகள்! ஒரு புதிய எண்ணத்தின் தொடக்கமாக இந்த நாள் அமையட்டும்.
“குறை சொல்லும் வீணன் அல்ல, குற்றம் களைந்து மாற்றம் விதைக்கும் சொல்லின் வித்தகன் நான்!”
அரசியல்வாதிகளின் ஊழலையும், தன்னிச்சையான அதிகாரத்தையும் கட்டுப்படுத்த “சாமானியன் உருவாக்கும் சட்டம்” எப்படி இருக்க வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? இதைப் பற்றி இன்னும் முழுமையாகவும், விரிவாகவும் ஆராய்ந்து, “அடுத்த வாரம் வரும் பகுதிகளில்” வெளியிடப்படும்.
அதுவரை சிந்திப்போம்… கேள்வி கேட்போம்!
“வித்தகன் விதைத்துவிட்டான்… விளைநிலம் நீங்கள்தான்!” 🌾🇮🇳

