என் சாம்பலும் சத்தமிடும்!
காற்றில் ஆடும் மூவர்ணம் வெறும் துணியல்ல,
நம் நரம்புகளில் ஓடும் நிமிர்வின் அடையாளம்!
அன்று, உடம்பில் பூட்டிய இரும்பு விலங்கொடித்தோம்…
இன்று, சாதி மதம் என்ற மனச் சிறைகளை உடைப்போம்!
இருளை நம்பிக் காத்திருப்பான் திருடன் – நம்
பிரிவை நம்பிக் காத்திருப்பான் தேசத்தின் எதிரி!
தேசத்தில் நிகழும் சில எதிர்பாராத தாக்குதல்களைப் பார்த்து,
“இது யாரோ செய்த சதியோ?” என்று
உன் மனதிற்குள் கோபத்தையும் சந்தேகத்தையும் விதைப்பார்கள்!
நன்றாக யோசி… உன் தேசத்தின் மீதே
உனக்கு அதிருப்தியை உருவாக்கி,
நம்மைப் பிரிப்பதே எதிரியின் தந்திரமான வியாபாரம்!
அதற்குப் பலியாகாமல் நம்மை நாமே காக்கத்தான்,
அணுவணுவாய் பலப்படுத்தப்படுகிறது இத்தேசத்தின் பாதுகாப்பு!
இந்தியாவின் அரண் என்பது – வெறும்
எல்லைக் காவலாளியின் துப்பாக்கியில் மட்டும் இல்லை!
அது ஒவ்வொரு குடிமகனின் நெஞ்சிலும்,
உறங்காத மூளையின் விழிப்புணர்விலும் உள்ளது!
இந்தியாவுக்கு எதிராகப் பரப்பப்படும்
ஒவ்வொரு செய்தியையும் பகுத்துப்பார்!
பகிரும் முன், அது உண்மையா என ஒரு நிமிடம் தேடு!
பொய்யென்றால், அடுத்த நொடியே அதை அழித்துப் போடு!
சமூக வலைதளங்களில் பறக்கும் கொடிகளை விட,
சக மனிதனை மதிக்கும் மனங்களில் பறக்கட்டும் சுதந்திரம்!
எல்லையில் ஆயுதம் ஏந்தத் தேவையில்லை,
இன்று உன் விழிப்புணர்வால் காப்போம் நம் சுதந்திர நாட்டை!
உடலில் ஓடும் கடைசிச் சொட்டு உதிரம் உள்ளவரை
என் தாய்மண்ணைக் காப்பேன்!
என் உயிர் பிரிந்து இந்த மண்ணோடு மண்ணானாலும்…
நாளை என் சாம்பலும் சத்தமிடும்
, “வந்தே மாதரம்… வாழிய என் பாரதம்” என்று!
ஜெய் ஹிந்த்!
-தேசிகன் வித்தகன்
